Thursday, January 15, 2009

பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு துண்டிப்பு? ப.சிதம்பரம் எச்சரிக்கை

மும்பை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து நடந்து வரும் புலனாய்வுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தக தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை நகரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கி உள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புலனாய்வுக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தவறினால் அந்த நாட்டுடன் இந்தியா வைத்துள்ள வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்புகளை துண்டிக்க நேரிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக லண்டனில் வெளியாகும் "தி டைம்ஸ்' பத்திரிகைக்கு சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல தொடர்புகள் இருந்து வருவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த புலனாய்வில் பாகிஸ்தான் உதவ மறுக்குமானால் இந்த தொடர்புகள் பலவீனமடைந்து துண்டித்துப் போகும் என்று கூறியுள்ளார்.

ஒத்துழைப்பு தராத பாகிஸ்தானில் வாழும் பாகிஸ்தானியரின் வர்த்தகம் வளர்வதற்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்?

பாகிஸ்தானியர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வதையும், இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதையும் நாங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: