Saturday, January 17, 2009

எம்.ஜி.ஆர் 93-வது பிறந்த நாள் விழா : தமிழகம் முழுவதும் கோலாகலம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா இனிப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், தியாகராயநகர், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தியாகராயநகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

No comments: