Wednesday, January 21, 2009

தமிழர் குடியிருப்புக்களை குறிவைத்து வன்னியில் குண்டுமழை :17 பேர் பலி

வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Imageசுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 மணியளவில் இலங்கை ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு பகுதியில் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தாகுதல் நடத்தப்பட்டது. இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். சுதந்திரபுரம் கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் குடும்பமாக பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.படுகாயமடைந்தவர்கள் அனைவரும் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களினால் படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு-சுதந்திரபுரம்-தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

No comments: